சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து, சென்னையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான, தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் உணவு தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதன் ஒருகட்டமாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, எழும்பூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா, என்.எச்.ஜெயகோபால் உள்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.