ஆவடி: அம்பத்தூர் ஏரியில் மிதந்த கூலி தொழிலாளி சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் சோழபுரம், பொன்னம்பலம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியபோதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் சுகன்யா கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று மாலை அம்பத்தூர் ஏரியில் ராஜேந்திரன் சடலம் மிதந்தது.