ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதி பச்சை நிறமாக மாறி இருப்பது குறித்து மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடற்பகுதியில் சில நாட்களாக கடலின் நிறம் மாறுபாடு அடைந்துள்ளது. கடலில் நிறம் மாறி பச்சையாக பாசி படிந்தது போன்று காணப்படுகிறது. பாம்பன் ரோடு மற்றும் ரயில் பாலத்தை ஒட்டிய கரையோரத்திலும், படகுகள் நிறுத்தப்படும் பகுதிகளிலும் கடல் பச்சை நிறமாக மாறி இருந்ததை காண முடிந்தது. இதனை அறிந்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர்.