ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலையில் திடீர் திருப்பம் காயமடைந்த ஊழியர் மார்பில் துப்பாக்கி குண்டு

சென்னை: ஒரகடம் டாஸ்மாக் விற்பனையாளர் கொலையின் போது படுகாயமடைந்த மற்றொரு ஊழியர் மார்பில் துப்பாக்கி குண்டு இருந்ததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே  ஒரகடம் அடுத்த வாரணவாசி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (42), இவர் ஒரகடம் டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி இரவு விற்பனை முடிந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் கத்தியால், துளசிதாசை சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற சக ஊழியர் ராமுவையும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  

காயம் அடைந்த ராமு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பில் இரும்பு துகள் சிக்கி இருந்தது. இதனை அகற்ற மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமுவிற்கு அறுவை சிகிச்சை செய்து மார்பில் இருந்த இரும்பு துகளை அகற்றினர். அது துப்பாக்கி தோட்டா என்று தெரியவந்துள்ளது. இதனால் கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொலையாளிகள் இருவரையும் பிடிக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: