ஆரணியாற்று தரைப்பாலம் சீரமைப்பு வாகன போக்குவரத்து தொடக்கம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு பிறகு தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே போக்குவரத்து தொடங்கியது. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நாகலாபுரம், நந்தனம் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது. இந்த தண்ணீரால் ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள தற்காலிக தரைப்பாலத்தின் மையப்பகுதியில் போடப்பட்ட ராட்சத பைப்புகளில் நடுவில் ஓட்டை விழுந்தது.  

இதனால், கடந்த 2 நாட்களாக ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிக பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணி முடியும் வரை கார், பைக் மட்டும் புதிய பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தரைப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் இரவு முடிந்தது. இதனால், நேற்று முதல் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வானக போக்குவரத்து தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: