சென்னை: ஓட்டுப் பதிவு நாளன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், கொழுமணிவாக்கம் ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தங்க காசு கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுபோட்டவர்களில் சிலர், அதை அடகு கடையில் வைத்தபோதுதான், அது பித்தளை காசு என்பது தெரியவந்தது. இதனால், தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை ஜீரணிக்க முடியாத சிலர் ஓட்டுக்கு காசு கொடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்களாம். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி, 1வது வார்டு வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று காலை அவசர அவசரமாக வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பெற்றுக் கொண்ட பொதுமக்களில் பலர், அவருக்கு ஆதரவாக தங்களது வாக்குகளை பதிவு செய்தார்களாம்.