ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நெல்கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்படும்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சொர்ணவாரி பருவ நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்க குருபுரம் கிராமத்தில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கிடங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நெல் கொள்முதல் பணிகளை முழு வீச்சில் விரைவுபடுத்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி, பருவ காலம் துவங்குவதற்கு முன்பே பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்தும் நெல்மணிகள் அடுத்த 15 தினங்களுக்குள் முழுமையாக கொள்முதல் செய்யவேண்டும். வரும் 20ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்யை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Related Stories: