டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி, எம்எஸ்சி மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: நோய்ப் பரவியல், தொற்று நோயியல் ஆகிய பிரிவுகளில் பகுதி நேர மற்றும் முழு நேர முனைவர் (பிஹெச்டி) படிப்புகள் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அப்படிப்புகளில் சேர சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். முழு நேர முனைவர் படிப்பு 3 ஆண்டுகளாகவும், பகுதி நேரப் படிப்பு 4 ஆண்டுகளாகவும் பயிற்றுவிக்கப்படும்.

அதேபோன்று முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ் / பிடிஎஸ் / ஆயுஷ் படிப்பு / இளநிலை கால்நடை அறிவியல் / எம்பிடி / எம்ஓடி / பி.பார்ம் / எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ் / பிடிஎஸ் / ஆயுஷ் படிப்பு / இளநிலை கால்நடை அறிவியல் / எம்பிடி / எம்ஓடி / பி.பார்ம் / எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதைத் தவிர, முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடர்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓர் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தகுதியுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான தகவல்களுக்கு பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: