டெல்லி: நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் நவராத்திரி விழா களைக் கட்டியுள்ளது. அங்குள்ள ஆலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. முப்பெரும் தேவியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழா இன்று முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின்போது, ஆலயங்களிலும் வீடுகளிலும் பூசைகளும் வழிபாடுகளும் களைகட்டும். அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கும் நவராத்திரி பூஜையில் முதலில், நல்ல நேரத்தில் கலசம் வைத்து பூஜைகள் தொடங்கப்படுகின்றன.
நவராத்திரியின் முதல் நாளை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள புகழ்பெற்ற காலி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் நவராத்திரி விழா தொடங்கியது. டெல்லியில் ஜந்தேவாளன் கோயிலில் நவராத்திரி முதல் நாளான இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துக்கள் என்றும் வரும் நாட்களில் ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டுவரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.