‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு... பூத்துருச்சு வெட்கத்தவிட்டு’ பாடலுக்கு காவலரை புல்லாங்குழல் மூலம் ஊத வைத்து மதுவிருந்துடன் ரசிக்கும் துணை கமிஷனர்

* ஜட்டியுடன் ‘குறு நில மன்னர் போல்’ ஆயில் மசாஜ்

* சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

சென்னை: மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் ‘குறு நில மன்னர் போல்’ வீட்டிற்கு காவலர்களை அழைத்து ஜட்டியுடன் ஆயில் மசாஜ் செய்து கொண்டு காவலர் ஒருவரை புல்லாங்குழல் மூலம் ஊத வைத்து, மது அருந்தியபடி ரசித்து கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல் துறையில் சிலர் பணியின் போது தேவையின்றி டிக்டாக் செயலி மூலம் வீடியோ மற்றும் பாடலுக்கு நடனமாடுவது, வசனம் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை ‘ஸ்மார்ட் போன்கள்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவை இருப்பின் பணியின் போது உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுமதியுடன் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை நகர ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் ஒருபடி மேலே சென்று ‘குறு நில மன்னர் போல்’ ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களை தனது வீட்டிற்கு அழைத்து ஒவ்வொரு வாரமும் ஜட்டியுடன் அணிந்த நிலையில் மசாஜ் செய்து கொள்கிறார்.அதோடு இல்லாமல் மசாஜ் ெசய்த எண்ணெய் உடலில் ஊறும் வரை காவலர் ஒருவர் அவருக்கு பிடித்த பாடலுக்கு ‘புல்லாங்குழல்’ மூலம் ஊதி அவரை ரசிக்க செய்ய வேண்டும். அவரும், அந்த இசையை தலையை ஆட்டி ஆட்டி ரசித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஜட்டியுடன் ஆயில் மசாஜ் செய்து கொண்டு மது அருந்துவதும், பாடலுக்கு ஏற்றப்படி துணை கமிஷனர் சோமசுந்தரம் தனது உடலை நலினத்துடன் அசைத்து மகிழும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் துணை கமிஷனர் சோமசுந்தரம், காவலர் ஒருவரை புல்லாங்குழலில் ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு......பூத்துருச்சு வெக்கத்தவிட்டு.... பேசி பேசி ராசியானதே.... மாமன் பேர சொல்லி ஆளானதே... ரொம்ப நாளனதே.....என்ற பாடலை வாசிக்க செய்து மது விருந்துடன் ரசிக்கிறார். அதோடு இல்லாமல் டிக் டாக் செயலியில் உதவி கமிஷனராக இருந்த போது சீருடையில் பதிவு செய்து இருந்த பாடல்கள், சினிமா வசனங்களும் தற்போது வெளியாகி போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் கண்ணியமான வகையில் பணியாற்றி வரும் காவலர்களை துணை கமிஷனர் சோமசுந்தரம் தனது வீட்டிற்கு அழைத்து அடிமைகள் போல் ஆயில் மசாஜ் செய்ய சொல்லியும், மது பானங்களை வாங்கி வர சொல்லி ஊற்றி கொடுக்க செய்யும் செயல் அங்கு அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்கள் இடையே மன அழுத்தத்தையும் முகம் சுழிக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: