வரதராஜ பெருமாள் கோயில் பெருந்தேவி தாயாருக்கு 19 கிலோ வெள்ளி கவசத் தடிகள்: பக்தர் காணிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பெருந்தேவி தாயாருக்கு 19 கிலோ வெள்ளிகவசத் தடிகளை, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் பக்தர்  காணிக்கையாக வழங்கினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழா காலங்களில் கோயிலுக்கு உள்ளேயே உற்சவ புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்வதற்கு ஏற்றவாறு, வெள்ளி கவசத் தடிகளை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் வழங்கினார்.

தனது சொந்த செலவில் ரூ.13.35 லட்சம் மதிப்பில் 9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி 19,446 கிராம் வெள்ளித் தகடு பதித்து, இந்த வெள்ளித்தடிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோயிலில் தாயார் சன்னதிக்கு மேளதாளங்கள் முழங்க வெள்ளிதடிகள் நேற்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர்  பெருந்தேவி தாயார் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெருந்தேவி தாயாருக்கு பயன்படுத்த கோயில் செயல் அலுவலர் என்.தியாகராஜனிடம் வெள்ளி கவசத்தடிகள் வழங்கப்பட்டன.

Related Stories: