திருவலம் அருகே பரிதாபம் குளிர்பானம் என நினைத்து மது குடித்த 4 வயது பேரன் பலி: அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு

திருவலம்: வேலூர் மாவட்டம்,  திருவலம் அடுத்த சுகர்மில் அண்ணா நகர் கன்னிகோயில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (62) தொழிலாளி. இவரது மகன் சுந்தரம், மகள் விஜயா இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விஜயாவுக்கு ருத்ரேஷ் (4) உட்பட 2 மகன்கள். சின்னசாமி தினமும் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பாராம். நேற்றுமுன்தினம் மாலை சின்னசாமி வீட்டில் மது குடித்துள்ளார். மீதியுள்ள மது மற்றும் தின்பண்டங்களை அங்கேயே வைத்துவிட்டு தூங்கிவிட்டாராம்.

அப்போது விளையாடிக்கொண்டிருந்த பேரன் ருத்ரேஷ், அங்கிருந்த தின்பண்டத்தை சாப்பிட்டுள்ளான். அங்கிருந்த மதுவையும் குளிர்பானம் என நினைத்து குடித்ததாக தெரிகிறது. இதில்  வாந்தி எடுத்து ருத்ேரஷ் மயங்கி விழுந்தான். சத்தம் கேட்டு எழுந்த சின்னசாமி, பேரன் மது குடித்து மயங்கியதை அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

உடனே தாத்தா, பேரன் இருவரையும் குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ருத்ரேஷை மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருத்ரேஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தான். புகாரின்பேரில் திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: