கார் பார்க்கிங் இடமாக மாறும் நியூஸ்கீம் ரோடு: முறைப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கார் பார்க்கிங் இடமாக மாறும் நியூஸ்கீம் ரோட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதனை முறைப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள இடமாக, நியூஸ்கீம் ரோடு உள்ளது. சுமார் ஒரு கி.மீ. தூரமுள்ள இந்த ரோட்டில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதிலும் இருசக்கர வாகனங்கள் முதல், கனரக வாகங்கள் வரை வந்து செல்லும் பிரதான ரோடாக இருப்பதால் எந்நேரத்திலும் போக்குவரத்து மிகுதியாக இருக்கும். ஆனால், இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக பிற வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவது தொடர்கிறது.

மருத்துவமனை, வணிக வளாங்களுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை ரோட்டில் தாறுமாறாக நிறுத்தி செல்கிறார்கள். சில நேரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை வரிசையாக நிறுத்தி செல்வதால், அந்த இடம் கார் பார்க்கிங்போல் உள்ளது. மேலும், அந்த வாகனங்கள் பல மணிநேரம் அங்கேயே நிற்பதால், அந்த வழியாக பிற வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல முடியாமல் திணறுகின்றனர். ரோட்டை அடைத்தவாறு நிறுத்தப்படும் வாகனங்களால் பாத சாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, நியூஸ்கீம் ரோட்டை அடைத்தவாறு மணிக்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி, சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: