“ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியே அரசின் இலக்கு” - பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். முதல்வர். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம் கிராம சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கிராம சபை கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள், தேவைகளை முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அவர்; கிராமம் தான் இந்தியா என்று கூறியவர் மகாத்மா காந்தி. காந்தியடிகளின் மனதை மாற்றிய பெருமைக்குரியது மதுரை. மதுரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்தது. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தோம். 2006-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி மேற்கொண்டேன். 2006-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தார்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் தேர்தல் வென்றவர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டினார் கலைஞர். பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்தியதற்காக சமத்துவ பெரியார் என்ற பட்டம் கலைஞருக்கு வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மக்களை சந்தித்தது மகிழிச்சி அளிக்கிறது. திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் கேட்டறிவேன்.

பாப்பாபட்டியில் ரூ.23.5 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். பாப்பாபட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நியாயவிலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படும் என கூறினார்.

Related Stories: