பாஸ்போர்ட் சேவா கேந்திரம் போல் மாறும் சார்பதிவாளர் அலுவலகங்கள்: அதிகாரிகளை சந்திக்காமலேயே பத்திரப்பதிவு செய்யும் வசதி; பதிவுத்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: பாஸ்போர்ட் சேவா கேந்திரா போல், சார்பதிவாளர் அலுவலகங்களை மாற்றுவது தொடர்பாக பதிவுத்துறை ஆலோசித்து வருகிறது. இதன் மூலம், அதிகாரிகளை இனி சந்திக்காமலேயே பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2018ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், எங்கிருந்தும், யார் வேண்டுமனாலும் பத்திரப்பதிவு செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், இடைத்தரகர்கள், நேரடியாக பதிவு செய்வதால் சிக்கல் உள்ளது.

மேலும், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களை சந்தித்து, ஆவணங்களை சரிபார்த்த பிறகு, பத்திரப்பதிவு செய்ய முடியும். எனவே, சில நேரங்களில் இடைத்தரகர்களை அணுகாதவர்களின் பத்திரங்களை தராமல் இழுத்தடிப்பதாகவும் குற்றாச்சாட்டு எழுந்தது. ஆவண பதிவின்போது பொதுமக்கள் அலுவலக ஊழியர்களை சந்திக்க வேண்டியிருப்பதால், பேரம் பேச வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம்போல், சார்பதிவாளர் அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் சொத்து ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இந்த சொத்து ஆவணங்களை பத்திரம் பதிய பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து அப்பாயிடனமென்ட் பெற்று கொள்ள முடியும். அவர்கள், நேரடியாக அதிகாரிகளை சந்திக்காமலேயே சொத்து ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியும். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் டிசிஎஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. எனவே, விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும், அவர் கூறுகையில், தற்போது பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் மாற்றப்பட்ட பிறகு, இனி சொத்து ஆவணங்கள் பதிவுக்கு வந்தாலே, இந்த ஆவணங்கள் பதிவுக்கு வந்தவர்கள் சரிதானா என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்காக கருவிழி மற்றும் விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் நடைமுறை அனைத்து அலுவலகங்களிலும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சம்பந்த்தப்பட்டவர்கள் சொத்து தான் என்பதை அறிய முடிகிறது. எனவே, அந்த சொத்து அரசுக்கு சொந்தமானதாக இருப்பின் தமிழ் நிலம் மென்ெபாருள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் போலி பதிவை தடுக்க முடியும். தற்போது டிசிஎஸ் நிறுவனத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் மூலம், பதிவுப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: