புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலை அக். 4ம் தேதிக்கு தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் தேர்தல் ஆணைய அறிவிப்பில் பட்டியலினத்தவர்களுக்கு வார்டுகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, இந்த தவறுகளை சரிசெய்யாமல் தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதியை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவிட்டனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு மனு குறித்தான விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

Related Stories: