சென்னை: வங்கக்கடலில் வடமேற்கு பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி, அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயல் ஒடிசாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் கடலோப் பகுதியில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. இதனால், வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. அதே நேரத்தில் தென் மேற்கு பருவக் காற்று காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சின்னக் கல்லார் பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை, சோலையாறு பகுதியில் 80 மிமீ மழை பெய்துள்ளது.