தமிழகம் முழுவதும் கிளப்களில் சோதனை நடத்த வேண்டும்: பத்திரப்பதிவு துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டுமென்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால் காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்றார். அரசு தரப்பில், மனுதாரர் கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. சட்டவிரோத பணம் வைத்து சூதாட்டம் நடப்பட்ட வழக்கும்  உள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை ஐஜியை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது. பத்திரப்பதிவு ஐஜி சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை சோதனை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கிளப்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்டு கிளப்களில் செயல்பாடுகள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட  காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கிளப்களின் பதிவுகளை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: