மரக்காணம் கலவரத்தில் பொது சொத்து சேதம்: பாமகவிடம் இழப்பீட்டை வசூலிக்க அரசுக்கு எந்த தடையும் இல்லை: நோட்டீசை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மாமல்லபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, மரக்காணம் அருகே கலவரம் ஏற்பட்டது.  இதில், போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஜிகே மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து துறை தரப்பில், மொத்தம், 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும் பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கலவர வழக்கில் மனுதாரரின் கட்சியினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு தொகையை வசூலிக்க எந்தவித தடையும் இல்லை. கலவரத்தின் போது பல அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. டாஸ்மாக்  கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு இழப்பீடு  நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசின் நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நிலையில் நோட்டீசை ரத்து செய்ய முடியாது. இந்த விசாரணையை 4 மாதத்தில் அரசு முடிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால்தான், இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதும் கடந்த 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இனி வரும் காலங்களில் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தவறும்  அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தை  முறையாக அமல்படுத்தாமல் இருக்க காரணம், பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆளும் கட்சியினரே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: