குன்றத்தூர்: உள்ளாட்சி தேர்தலையொட்டி குன்றத்தூர் ஒன்றியம் மவுலிவாக்கம், பாய்கடை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, நேற்று அக்கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விட்டார்கள். அது குற்றம். தற்போதும் தேர்தலை தள்ளிப்போட பார்த்தார்கள். அதை மிரட்டியதால் மட்டுமே, தற்போது 9 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. முதல் முறையாக உங்கள் பகுதிகளில் இருந்து, உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நேர்மையான நபரை தேர்ந்தெடுங்கள். அதுபோல், நேர்மையாக உள்ள நல்ல நபரை தேர்ந்தெடுங்கள். உள்ளாட்சி தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களிடம் உள்ள ஆட்கள் ரவுடிகள் கிடையாது. எங்களிடம் நேர்மையானவர்கள் உள்ளனர் என்றார்.