விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பாரத் பந்த்: பலத்த போலீஸ் பாதுகாப்பு; ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தநிலையில்   நாடு தழுவிய வேலை நிறுத்தம்  தொடங்கியது .  விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* தமிழகத்தின் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.  ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

* பாரத் பந்த் காரணமாக பஞ்சாப் -அரியானா எல்லையை முடக்கி ஷம்புவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  விவசாயிகள் போராட்டத்தின் பாரத் பந்த் அழைப்பைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சம்பு எல்லையை  மாலை 4 மணி வரை தடுத்துள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறினார்.

* தஞ்சையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

* பாரத் பந்த் காரணமாக கேரளாவில் அரசு மறும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

* புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

Related Stories: