2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி ஒகேனக்கல் சுற்றுலா தலம் ஓராண்டுக்குபின் இன்று திறப்பு

தர்மபுரி: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடியது. அங்குள்ள சிறு வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், அரசின் வழிகாட்டுதலின்படி ஓராண்டுக்கு பிறகு இன்று (27ம் தேதி) முதல், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தெரிவித்துள்ள தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பாடி செக்போஸ்ட் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது ஆன்-லைன் ஆதாரம் காண்பிக்க வேண்டும். அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. பரிசல்களில் சென்று சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படும்  பரிசல்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு  என கூறியுள்ளார்.

Related Stories: