அரசு கட்டிடங்களுக்கு 100% குடிநீர் இணைப்புகள்: தமிழகத்துக்கு இணை அமைச்சர் பாராட்டு

சென்னை:  ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை மற்றும் ஜல் சக்தி இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளார். இந்தநிலையில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தூய்மை பாரத இயக்கம் ஊரகம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளைச்  சார்ந்த 79,395 ஊரகக் குடியிருப்புகளில் சுமார் 1 கோடியே 27 லட்சம் வீடுகளில் இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுக்கட்டிடங்களுக்கு 100 சதவீதம்  குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பாராட்டினார். மேலும், குடிநீர் இணைப்புகளை உரியமுறையில் பராமரித்து பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், பாதுகாக்கவும் மற்றும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை  வழங்கினார். அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக தனி கிராம திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும், மக்களின் சுகாதார வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட தனி நபர் கழிப்பறைகள் மற்றும் சமுதாய வளாகங்கள் கட்டி மக்களை பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.366.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக்கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்திட எதுவாக பற்பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை குறிப்பிட்டு அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பாராட்டினார். மக்களிடையே சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நெகிழி கழிவுகள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

Related Stories: