ஏரிகளில் இருந்து பாசன பரப்புக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு செல்லும் பண்ணை மேம்பாட்டு திட்டம்: நீர்வளத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை:பிரதம மந்திரி வேளாண்மை பாசன திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் என்ற அடிப்படையில் பண்ணை மேம்பாட்டு பணிகள் என்கிற உப திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனத்தில் நீர் உபயோக திறனை மேம்படுத்துவதன் மூலம், பாசன பரப்பை அதிகரிக்க முடிகிறது.பாசன கட்டமைப்பின் குறைபாட்டினை சரி செய்தல், 30 சதவீத பரப்பினில் மேம்படுத்தப்பட்ட நுண்ணீர் பாசனத்தை நிறுவுதல், சமுதாயம் சார்ந்த சூரிய ஆற்றல் பம்ப் செட்டுகள் மூலம் நுண்ணீர் பாசனத்தை இயக்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இந்த திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள் புனரமைக்கப்படுகிறது.

மேலும், பாசன பரப்புக்கு அருகே புதிதாக கால்வாய் அமைக்கப்படுகிறது. தற்போது நீர்வளத்துறை மூலம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 50 ஏரிகள், குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த குளங்களில் இருந்து பாசன பரப்புக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிற மாவட்டங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பாசன பரப்பு அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: