மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெங்கடாச்சலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களுக்கு என்ஓசி வழங்கியதில்  முறைகேடு செய்ததாக புகார் எழுந்தநிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.15 லட்சம் கட்டுக்கட்டாக ரொக்க பணம், தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவரும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவை நியமனம் செய்து தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்குக் கூடுதலாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்  தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை தொடர்பான ஆக்கப்பூர்வமான பணிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர் சுப்ரியா சாகு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: