மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய  அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான  மம்தா பானர்ஜிக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.  இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த அனுமதி ஒரு ‘அரசியல் கோணத்தில்’ மறுக்கப்பட்டது என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வர் பங்கேற்பதற்கான அந்தஸ்துக்கு ஏற்ப நிகழ்வு இல்லை என கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி அன்னை தெரசாவை மையப்படுத்தி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இத்தாலிய அரசு, மம்தா பானர்ஜியை எந்த பிரதிநிதிகளுடனும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. மம்தா பானர்ஜி பின்னர் தொழில் துறை பிரதிநிதிகள் அனுமதியை முன்மொழிந்தார்.

அதற்காக வெளியுறவு அமைச்சகத்தை கோரினார். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பட்டாச்சார்ய தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இத்தாலி பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு. ஏற்கனவே, சீனா பயணத்தை ரத்து செய்தது. சர்வதேச உறவுகளையும், இந்தியாவின் நலன்களையும் மனதில் வைத்து அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஏன் இத்தாலி மோடி ஜி? மேற்கு வங்கத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: