விருத்தாசலம் தம்பதி ஆணவ கொலை வழக்கில், பெண்ணின் அண்ணனுக்கு சாகும் வரை தூக்கு : அப்பா உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை!!

கடலூர்:விருத்தாசலம் அருகே கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் பி.இ. பட்டதாரி. இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பெற்றோர் உறவினர் எதிர்ப்பால் திருமணத்தை மறைத்து அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே, முருகேசன் தனது மனைவி கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு காதல் விவரம் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக 8-7-2003 அன்று முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராம மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சில நாட்களுக்கு பின்னர் இந்தச் சம்பவம் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் கலப்பு திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர். ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வழக்கை தற்பொழுது விசாரித்து வரும் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா இன்று வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் இறந்த முருகேசனின் தரப்பைச் சேர்ந்த அய்யாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோரை விடுவித்தார்.

மேலும்  கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மற்றும் இருதரப்பு உறவினர்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, தமிழ்மாறன், உதவி ஆய்வாளர் (தற்போது ஆய்வாளராக உள்ளார்) செல்லமுத்து, ஆய்வாளர் (தற்போது ஒய்வு டிஎஸ்பி) ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட13 பேரில் கண்ணகியின் அண்ணன்  மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது எஞ்சிய 12 பேரில் கண்ணகியின் அப்பா துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, வெங்கடேசன், மணி ஆகிய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: