செய்யூர்: மதுராந்தகம் அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகளை அதிகாரிகள் அகற்ற சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராம சாலையோரத்தில், அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், செல்வதுரை, ராஜம் ஆகியோர் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, சுமார் 25 ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு அருகே, சண்முகம் என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை, அவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக, கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.