கடந்த ஆட்சியில் தவறான மணல் விநியோக கொள்கையால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு: மணல் லாரி உரிமையாளர் சங்கம் பகீர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழக அரசே மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஆன்லைன் மூலம் மணல் விற்பனையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. ஆளும் தரப்பில் வேண்டப்பட்டவர்கள் மணல் விற்பனை செய்யப்பட்டன. இதனால், மணல் கேட்டு பலர் காத்திருந்தனர். இந்நிலையில் குவாரிகள் திறக்கப்பட்டாலும், கிடங்குகள் வேறொரு இடத்தில் இருந்தது. எனவே, குவாரிகளில் இருந்து கிடங்குகளுக்கு மணல் கொண்டு செல்லும் போது அதிகாரிகள் சிலர் கைகோர்த்து கொண்டு மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதன் மூலம் அவர்கள் பல கோடிக்கு வருவாய் ஈட்டினர். இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், புதிதாக குவாரிகளை திறக்காமல் செயற்கையாக மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதனால், ஆற்றுமணலுக்கு பதிலாக எம்சாண்ட் பயன்படுத்த தொடங்கினர். இந்த எம்சாண்ட் குவாரிகள் பெரும்பாலும் ஆளும் கட்சி மற்றும் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் நடத்துவது என்று கூறப்படுகிறது. இதில், ஒரு சில குவாரிகளில் மட்டுமே விஎஸ்ஐ எனப்படும் இயந்திரத்தை பயன்படுத்தி மணல் தயாரிக்கின்றனர். பல குவாரிகளில் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் என்கிற பெயரில் விற்பனை செய்கின்றனர். இதனால், எம்சாண்ட் மணல் கூட ஒரிஜினல் மணலா என்பது தெரியாமல் மக்கள் வாங்கி பயன்படுத்தினார்கள். இதன் காரணமாக, பல கட்டிடங்களில் உறுதி தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில், தரமான மணல் கிடைக்கும் வகையில் தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியின் தவறான மணல் விநியோக கொள்கையால் அரசுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தங்களது தேர்தல் அறிக்கையில் அரசே டாமின் என்கிற நிறுவனம் மூலம் மணல் விநியோகிக்கும் எனக் கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக அரசு மணல் விநியோகம் நிறுத்தப்பட்டது. இன்று வரை கடந்த 7 மாத காலமாக மணல் இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெறுவது தடைபட்டுள்ளது. தரமில்லாத எம்சாண்ட் மூலம் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அதன் தரம் கேள்விக்குறியாக உள்ளது. தரமான மணலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories: