சென்னையில் வயதான பெண்மணியின் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கைது..!!

சென்னை: சென்னையில் வயதான பெண்மணியின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை திருவான்மியூரில் லீனா பெர்னாண்டஸ் என்ற மூதாட்டிக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை காஞ்சிபுர மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவ. அரவிந்தனுக்கு கடந்த 2018ம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு கொடுத்துள்ளார். 4 மாதங்கள் முறையாக வாடகை கொடுத்த சிவ. அரவிந்தன் பின்னர் வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டி லீனா பெர்னாண்டஸ், தமது வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போது அதிர்ச்சியடைந்தார்.

சிவ. அரவிந்தன், 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு அவர் மேல்வாடகைக்கு வீட்டை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாஜக நிர்வாகி சிவ. அரவிந்தனிடம் கேட்ட போது அவர் கடுஞ்சொற்களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி லீனா பெர்னாண்டஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், விசாரணை நடத்தி பாஜக நிர்வாகி சிவ. அரவிந்தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: