‘ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு’ தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

சென்னை: ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், ஏற்றுமதி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க  புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை நடத்துகின்றன. அந்தவகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம் -  முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்து பேருரையாற்றுகிறார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு ஏற்றுமதி  மேம்பாட்டுக் கொள்கை” மற்றும் “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஆகியவற்றை வெளியிடுகிறார்.

பின்னர், பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க  புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன. உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன.  கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன.   இக்கண்காட்சி பொது மக்களுக்காக இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை திறந்து இருக்கும். விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை  அமைச்சர்  தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒன்றிய அரசின் வர்த்தக துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

Related Stories: