உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு அதிமுக-பாஜ பேச்சுவார்த்தையில் இழுபறி: ராயப்பேட்டை தலைமையகத்தில் நடந்தது

சென்னை:   ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6,் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுக-பாஜ இடையிலான கூட்டணியும் நீடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக-பாஜ இடையே நடைபெற்றது. அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், மாபா.பாண்டியராஜன் மற்றும் பாஜ சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசப்பட்டது. அப்போது, சட்டமன்றத் தேர்தலில் பாஜ 4 இடங்களில் வெற்றி பெற்றதை அடிப்படையாக வைத்து அதிக இடங்களை ஒதுக்கக்கோரி கோரிக்கை விடுத்ததாகு தெரிகிறது. அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதும் பேச்சு முடிவுக்கு வராமல் இழுபறியில் முடிந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அளித்த பேட்டி: கூட்டணி இடங்கள் குறித்து தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாஜ சார்பில் மாவட்டத்திற்கு 2 பார்வையாளர்கள் வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைந்து செயல்படுகிறோம் என கருத்துக் கூறியிருக்கிறோம். அதிமுக, இதை முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தலில், பாமகவும் விருப்பப்பட்ட இடத்தை கேட்டுள்ளார்கள். நாங்களும் விருப்பப்பட்ட இடத்தை கேட்டுள்ளோம். அதிகாரப்பூர்வமாக பாஜதான் கூட்டணியில் உள்ளது. பாமகவினர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். வெற்றி முக்கியம். பாமக மீண்டும் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. 9 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றால் சந்தோஷம் தான்.இவ்வாறு கூறினார்.

Related Stories: