அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதிசெய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டி அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் அரசு பிளீடர் பி. முத்துகுமார் ஆஜராகி, அரசின் திட்டங்களை அமல்படுத்தும்போது அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதி பங்கீடு வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். இதன்மூலம் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக குறை இருக்காது. ஒருவரும் குறை சொல்ல முடியாது என்று தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து தொகுதிகளிலும் மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படாது என்று நம்புகிறோம் என்று கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: