தாம்பரம்: வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால், 5 வயது சிறுவனை சித்ரவதை செய்து அடித்து கொலை செய்துவிட்டு, விளையாடியபோது மயங்கி விழுந்ததாக நாடகமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது செய்தனர்.கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சூசை மேரி (30). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளை சரிவர கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2வது குழந்தை கீர்த்தி (8) மற்றும் 3வது குழந்தை ஆபேல் (5) ஆகியோரை பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், எம்ஜிஆர் தெருவில் உள்ள சூசை மேரியின் அக்கா டார்த்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, டார்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து, டார்த்தியின் மகள் மேரி (20), இந்த சிறுவர்களை கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததால் இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.