பெரியாற்று கால்வாயில் அடித்துச் சென்ற கல்லூரி மாணவர் உடல் மீட்பு

மேலூர் : அலங்காநல்லூர் அருகே, பெரியாற்றுக் கால்வாயில் அடித்துச் சென்ற கல்லூரி மாணவர் உடலை மேலூர் அருகே தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கணேசன். இவரது மகன் ஹரிபிரகாஷ் (18). இவர், மதுரை திருநகர் தனியார் கல்லூரியில் ‘பிசியோதெரபி’ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள பெரியாறு பாசன கால்வாயில் குளித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜன் தலைமையிலான வீரர்கள் மேலூர் எட்டிமங்கலம் அருகே, கால்வாயிலிலிருந்து மாணவரின் உடலை மீட்டனர். இது குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: