குருசுகுப்பம், வில்லியனூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தியை யொட்டி வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் கடலில் கரைத்தனர்.விநாயகர் சதுர்த்தி கடந்த 10ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வீதிகளில் வைத்து வழிபாடு செய்வதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்று வீடுகளில் வைத்து வழிபாடு செய்தனர். ஆனால் புதுவையில் வீதிகளில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்து முன்னணி சார்பில் 200க்கும் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வீடுகளுக்கு வாங்கிச் சென்று வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் தங்கள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை குடில்கள் முன்பு நேற்று வைத்து விட்டு சென்றனர். சிலர் சிலைகளை நீர் நிலைகளுக்கு எடுத்து சென்று கரைத்தனர். நேற்று மதியம் புதுவை குருசுகுப்பம்   பகுதியில் குடும்ப குடும்பமாக சிலைகளை எடுத்துவந்து கடலில் கரைத்தனர்.

இதுதவிர விழுப்புரம், கண்டமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச்   சேர்ந்த பெரிய விநாயகர் சிலைகள் அனைத்தும் அங்குள்ள வில்லியனூர் சங்கராபரணி   ஆற்றில் கரைக்கப்பட்டன. சிறிய விநாயகர் சிலைகளையும் பொதுமக்கள் அங்கு   எடுத்துவந்து கடலில் கரைத்துச் சென்றனர்.இந்து முன்னணி சார்பில் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை 14ம்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று   ராட்சத கிரேன் பயன்படுத்தி கடலில் கரைக்க முடிவு செய்துள்ளனர்.

ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைகள்

காலாப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கனகசெட்டிக்குளம் இசிஆர் சாலை வழியாக காலாப்பட்டு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

Related Stories: