ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்பு காளை பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் இங்குள்ள மேம்பாலம் இறங்கும் சுண்ணாம்பு காளை பகுதியிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் நோக்கி இந்த சாலை செல்கிறது. மேலும் இந்த சாலை வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்லும் பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக மேம்பால சாலை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மேம்பாலம் இறங்கும் பகுதியின் அருகே சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாத இந்த பகுதியில் ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் தாங்கள் ஓட்டி வரும் வாகனங்களை இந்த பள்ளத்தில் விட்டு கீழே விழுந்து எழுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் நடுவே உள்ள ராட்சத பள்ளத்தை சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.