சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 716 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் ரூ.9.96 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டலங்கள் மூலமாக நடைபெறும் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், பிரத்யேக காலணிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் எச்சரிக்கை பலகைகள் பணி நடைபெறும் இடங்களில் வைக்கப்படுகிறது.