சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனஉயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக வாதிட்டார்.