மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  யுபிஎஸ்சி  நடத்தும் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனஉயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக வாதிட்டார்.

ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். எனவேதான், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுகிறது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் புதிதாக கோரிக்கை மனுவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும். அதை 8 வாரத்திற்குள் பரீசிலித்து உள்துறை அமைச்சகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: