மன்னார்குடி அருகே சட்ரஸிலிருந்து பாமணி ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை தேடும் பணி தீவிரம்

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த குறுவைமொழி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ஆகாஷ்(22), திருமணமாகாதவர். இவர் தனது தந்தைக்கு சொந்தமான லாரியில் டிரைவராக இருந்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சபரி. இருவரும் நெருங்கிய நண்பர்கள். குறுவைமொழி கிராமத்தை அடுத்து பாமணியாற்றின் குறுக்கே உள்ள அகமனான் சட்ரசுக்கு நேற்று மாலை ஆகாஷ் தனது நண்பன் சபரியுடன் சென்றுள்ளார்.

சட்ரஸ் மேல்தளத்தில் இருவரும் நின்று தண்ணீர் ஓடுவதை வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது நிலைதடுமாறி ஆகாஷ் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது பாமணியாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் ஆகாஷ் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.தகவல் அறிந்த மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விசுவநாதன், உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் விஜயராணி, ராஜேஷ் கண்ணன், எஸ்எஸ்ஐ உதயகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மன்னார்குடி தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர்கள் பாலசுப்ரமணியன், மானெக்சா ஆகியோர் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி நீரில் அடித்து செல்லப்பட்ட ஆகாஷை சல்லடைபோட்டு தேடி வருகின்றனர்.

Related Stories: