தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் பெட்ரோல் மீதான வரியை ஏன் குறைக்கக்கூடாது? கர்நாடகா அமைச்சர் கேள்வி

பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் பாஜ முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் நகரவளர்ச்சி துறை அமைச்சர் பைரதி பசவராஜ் பேசும்போது, ``பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் வரியை குறைத்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்துள்ளது. அதே  நிலைப்பாட்டை நமது மாநிலத்திலும் எடுத்தால், அரசுக்கு எதிராக சபாமிட்டு வரும் மக்களின் கோபம் குறையும் அல்லவா?’’ என்ற கேட்டார். அமைச்சரின் கேள்வியை பல அமைச்சர்கள் ஆதரித்தனர். இதற்கு முதல்வர் பசவராஜ்பொம்மை, ‘‘இன்னும் ஓரிரு மாதங்களில் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல், ஊரக உள்ளாட்சிகளில் இருந்து சட்டப்பேரவைக்கு 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் சமயத்தில் வரியை குறைக்கலாம்’’ என்று கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: