வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி முடிந்து உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதித்தது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1வது நிலையில் உள்ள 2வது அலகில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 49 நாட்கள் பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடித்து நேற்று காலை மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் அந்த அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் நேற்று மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: