ஜெர்மனி பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஆர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி.!

சென்னை: ஜெர்மனி பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஆர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா எனும் பெண்மணி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சென்னை ஒன்றிய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆகஸ்ட் 10ம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹுசைனி ஆகியோர் கைது செய்யபட்டனர். இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன், நடிகர் ஆர்யா தான் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கூறினார். இதையடுத்து, கடந்த 2ம் தேதி நடிகர் ஆர்யா காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நடிகர் ஆர்யா சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது: நடிகர் ஆர்யா போல் நடித்து ஜெர்மன் பெண்ணை ஏமாற்றிய குற்றவாளி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையின் படி நடந்த விசாரணையில் ஆர்யாவிற்கும் இவ்விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார்.

Related Stories: