முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வருமானத்தைவிட 73% கூடுதலாக சொத்து: லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் வாதம்

சென்னை:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன் வைத்தார்.

அப்போது அவர், ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்த விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது மேல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.வழக்கை கைவிடுவதை பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும். ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது. தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளது.இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட மேல் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது என்று வாதிட்டார்.அப்போது, இந்த வாதத்திற்கு பதிலளிக்கவும், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை  செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: