அதிமுக ஆட்சியில் அலட்சியம் விரகனூர் அணையை தூர்வார வேண்டும்

*முதல்வருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை : மதுரை விரகனூர் அணையை தூர்வார வேண்டுமென விவசாயிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை அருகே விரகனூர் பகுதியில் அமைந்துள்ளது விரகனூர் மதகு அணை. 1975ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞரால் கட்டப்பட்டது. இந்த அணை மூலம் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு காலத்தில் இந்த அணைப்பகுதியே மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக இருந்து வந்தது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பராமரிப்பின்றி தூர் வாராமல் ஆகாயத்தாமரை மற்றும் கருவேல மரங்கள் மண்டி புதர் போல் காணப்படுகிறது. இதனால் மானாமதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டிய தண்ணீர் செல்லவில்லை. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறும்போது, ‘‘மதகு அணையை தூர்வாரி விவசாயிகள் பலன் பெறும் வகையில் அணையை சீர் செய்யவேண்டும். இதனால் 3 லட்சம் ஏக்கர் பாசன நிலம் காக்கப்படும். எனவே, அதிமுக அரசு முடக்கிய அணையை, தமிழக அரசு சீர் செய்து ஆணையிட வேண்டும்’’ என்றனர். இதன்பேரில் விவசாயிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

Related Stories: