திஸ்பூர்: அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் இடையே பாயும் நதியான பிரம்மபுத்திராவிலும் அதன் துணை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் வெள்ளத்தால் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1500 கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மொத்தம் 6.48 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவின் 70% பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள் மேடான இடம் நோக்கி நகர்ந்து வருகின்றன.