சென்னை: விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை-பெருந்தொழில் கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: டிட்கோவின் கூட்டாண்மை நிறுவனமான டைடல் பார்க் நிறுவனம், தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுமார் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்காக்களை அமைக்கவுள்ளது. இந்த டைடல் பூங்காக்களை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அரசு வழங்க உள்ளது. டைடல் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிறப்பு நோக்கு நிறுவனத்தில் அரசின் பிரதிநிதியாக டிட்கோ நிறுவனம் ஒரு பங்குதாரராக செயல்படும். முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.