சென்னை: ஜி.கே.மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தமாகா நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூப்பனாரின் நினைவிடத்தில் நேற்று காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, நினைவிடத்துக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.