பழநி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால், பழநி அருகே உள்ள வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வரதமாநதி அணை உள்ளது. அணையின் உயரம் 67 அடியாகும். பழநி நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பழநி பகுதி விவசாயத்துக்கும் ஆதாரமாக இந்த அணை உள்ளது. அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் மழை பெய்யும்போது இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.கடந்த சில தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவார பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 105 கன அடி நீர் வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழை அளவு 30 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது.