ராகுலின் டிவிட்டர் கணக்கை முடக்கியதால் ‘காடை’யை வறுத்தெடுத்த மாஜி காங். எம்பி மகன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

ஐதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது டுவிட்டர் பெயரை ராகுல்காந்தி என்று மாற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், டுவிட்டரின் லோகோவில் உள்ள குருவியை போல, எண்ணெயில் பொரியல் செய்து அந்த பதார்த்தத்தை டுவிட்டர் தலைமையகத்துக்கு கூரியர் மூலம் அனுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டுவிட்டர் குருவியை சமையல் எண்ணெயில் வறுத்தது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஹர்ஷ குமாரின் மகன் ஜி.வி.ஸ்ரீ ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜி.வி.ஸ்ரீ ராஜ் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் சார்பில் டுவிட்டர் பறவையாக (குருவி) பாவித்து காடையை எண்ணெயில் போட்டு வறுத்தோம். அதனை டுவிட்டர் நிறுவனத்துக்கு பார்சலாக அனுப்ப உள்ளோம். ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதற்காக இந்த நூதன போராட்டத்தை நடத்தினோம்’ என்றார்.

Related Stories: